மனுதர்மத்தில் அப்படி என்னதான் இருக்கு?

 

மனுதர்மத்தில் அப்படி என்னதான் இருக்கு?

கடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு படுத்தி மனு ஸ்மிருதி நூலில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகளை திருமாவளவன் குறிப்பிட்டதை மட்டும் எடிட் செய்து சிலர் அந்த வீடியோவை வைரலாக்கினர். இது சர்ச்சையை கிளப்பியது. இதற்காக திருமாவளவன் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து திருமாவளவன் அதன் முழு வீடியோவை வெளியிட்டார். மனு ஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டிருந்ததை தான் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தேன் என்றும் விளக்கம் அளித்தார். இந்த நிலையில், மனு ஸ்மிருதி நூலை தடை செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருமாவளவன் தலைமையில் விசிகவினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

மனுநீதி என்ற அநீதி – பெரியார் – mark2kali

இவ்வளவு சர்ச்சைக்குள்ளான இந்த மனுதர்மத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என அதனை எதிர்ப்பவர்கள் கேட்டோம். அவர்கள் இதுகுறித்து கூறுகையில், “மனுதர்மம் – அத்யாயம் 5 – சுலோகம் 148 : பெண் சுயவிருப்பத்தில் வாழக்கூடாது . சிறுவயதில் தந்தைக் கட்டுப்பாட்டிலும் , பருவ வயதில் கணவன் கட்டுப்பாட்டிலும் , கணவன் இறந்தபின் பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும் , எப்போதும் தன் விருப்பத்தில் அவள் வாழக்கூடாது .

மனுதர்மம் – அத்யாயம் 5 – சுலோகம் 154 : கணவன் மோசமானவனாய் , கொடியவனாய் இருந்தாலும் , பிற பெண்களோடு உறவு கொண்டு அலைபவனாயினும் , நன்னடத்தை , நற்குணம் இல்லாதவனாயினும் , பத்தினிப் பெண் என்பவள் அக்கணவனையே தெய்வமாக வழிபட்டு வாழவேண்டும்

மனுதர்மம் – அத்யாயம் 8 – சுலோகம் 379 : கொலைத் தொழில் புரிந்த மற்ற ஜாதிக்காரர்களைத் தூக்கில் போட வேண்டும் . பிராமணன் கொலைக் குற்றம் செய்வானேயானால் , அவனது தலை மயிரை மொட்டையடித்தலே தண்டனையாகும் .

பொசுங்கட்டும் மனுதர்மம்! Pongatum Manutharmam!

மனுதர்மம் – அத்யாயம் 9 – சுலோகம் 19 : பெண்கள் பெரும்பாலும் விபசாரிகள் என்று அநேக சாஸ்திரங்கள் கூறுகின்றன .

மனுதர்மம் – அத்யாயம் 9 – சுலோகம் 35 : ஆணுறுப்பு , பெண்ணுறுப்பு இவற்றில் ஆணுறுப்பே உயர்ந்தது .

மனுதர்மம் – அத்யாயம் 9 – சுலோகம் 52 : மற்றவன் மனைவியிடத்தில் மனைவியில்லாத வேறொருவன் உடலுறவு கொண்டு பிள்ளை பெறலாம்

மனுதர்மம் – அத்யாயம் 9 – சுலோகம் 60 : கணவனை இழந்த பெண்ணை ஒரு ஆண் தன் உடல் முழுக்க நெய்யைப் பூசிக்கொண்டு , இரவில் , இருட்டில் உடலுறவு கொண்டு பிள்ளை பெறலாம்

மனுதர்மம் – அத்யாயம் 9 – சுலோகம் 78 : கணவன் சூதாடுகிறவனாய் இருந்தாலும் , குடிகாரனாயிருந்தாலும் , நோயாளியாக இருந்தாலும் , மனைவி அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் . இல்லையென்றால் அவளுக்கு ஆடை , அலங்காரம் , படுக்கை தராமல் விலக்கி வைக்க வேண்டும் .

மனுதர்மம் – அத்யாயம் 9 – சுலோகம் 94 : முப்பது வயது ஆண் . அழகான 12 வயது பெண்ணையும் , இருபத்து நான்கு வயது ஆண் எட்டு வயதுள்ள பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என தெரிவித்தனர்.

இப்படி பெண்கள் குறித்து பழமைவாத கருத்துக்கள் மனுதர்மத்தில் இருப்பதாலேயே அதனை மக்கள் எதிர்க்கிறார்கள். இந்நூலில் பிராமணர்களுக்கு ஆதரவாக கூறப்பட்டிருக்கும் சில கருத்துக்கள் அந்த சமூகத்தையே வெறுக்க வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது என்றே கூறலாம். மனுதர்மம் இன்றைய இளம் தலைமுறையினர்களின் பார்வையில் புறந்தள்ளப்படும் நூலாகவே இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.