“கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவியதால், 4 எம்எல்ஏ-க்களை இழந்தோம்” – கதிர் ஆனந்த்
கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, அவர்களுக்கு உதவியதால் திமுக 4 எம்எல்ஏ-க்களை இழந்தது என்று அக்கட்சியின் வேலூர் தொகுதி எம்.பி., கதிர் ஆனந்த்த தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ஊராட்சியில் திமுக சார்பில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் அக்கட்சியின் வேலூர் தொகுதி எம்.பி., கதிர்ஆனந்த் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தின் இடையே மழை குறுக்கிட்ட நிலையில் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் இடையே அவர் உரையாற்றினார். அப்போது, அரசு சார்பில் 2500 ரூபாய் கொடுத்தால் அதனை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும், அது உங்களின் வரிப்பணம் என்றும் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் மக்கள் உயிரிழந்தபோது யாருக்குமே உதவி செய்யாதவர்கள் இவர்கள் என்ற கதிர் ஆனந்த், தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டிருந்த நிலையில் பட்டினியில் வாடியபோது, இவர்களில் யாரேனும் வந்தார்களா? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், கொரோனா காலத்தில் திமுகவினர் மக்களிடம் சென்று அவர்களுக்கு உதவிகளை செய்ததால் 4 எம்எல்ஏக்களை இழந்தோம் என்றும் கதிர்ஆனந்த் பேசினார். இந்த கூட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.