காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

 

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

ஈரோடு

பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானியில் காலிங்கராயன் அணைக்கட்டு உள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், பவானி ஆறு வழியாக காளிங்கராயன் அணைக்கட்டு வந்தடைகிறது. இங்கிருந்து கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரானது காளிங்கராயன் பாளையம், ஈரோடு, பள்ளிபாளையம், வெண்டிபாளையம், கருமாண்டம் பாளையம், பணப்பாளையம், கொடிமுடி வரை 56 மைல் தூரம் செல்கிறது. இதன் மூலம் இப்பகுதிகளில் உள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

இந்த நிலையில், நேற்று முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி, நடந்த நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி கலந்துகொண்டு மதகுகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, காலிங்கராயன் கால்வாயில் பொங்கும் நுரையுடன் சீறிப்பாய்ந்த தண்ணீருக்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் விவசாயிகள் கரும்பு, வாழை,மஞ்சள், நெல் உள்ளிட்டவைகளை பயிர் செய்து பயனடைய முடியும் என தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், பாஜக மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணி, பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் துணைத் தலைவர் கலைச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.