அலட்சியம் செய்யக் கூடாத புற்றுநோய் அறிகுறிகள்!

 

அலட்சியம் செய்யக் கூடாத புற்றுநோய் அறிகுறிகள்!

உலக அளவில் மக்கள் அதிக அளவில் உயிரிழக்கப் புற்றுநோய் காரணமாக இருக்கிறது. புற்றுநோயை வைத்து பல லட்சம் கோடி பிசினஸ் நடப்பதாக ஒரு தரப்பினர் குற்றச்சாட்டையும் முன் வைக்கின்றனர். அது ஒருபுறம் இருந்தாலும் நம்முடைய அஜாக்கிரதை மற்றும் விழிப்புணர்வு இன்மைதான் அதிக உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அலட்சியம் செய்யக் கூடாத புற்றுநோய் அறிகுறிகள்!

ஆரம்ப நிலை அறிகுறிகளை அறிந்து உரிய சிகிச்சை பெற்றால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் புற்றுநோய் நன்கு பரவிய பிறகு ஸ்டேஜ் 3, 4ல் தான் பலரும் மருத்துவமனைக்கே வருகின்றனர். இதனால்தான் அவர்கள் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்கின்றனர் மருத்துவர்கள். புற்றுநோய் வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்ன என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்!

நிணநீர் முடிச்சுகளில் வீக்கம் மிக முக்கிய அறிகுறியாகும். சாதாரண ஃப்ளு சளி, காய்ச்சல் போது நம்முடைய தொண்டை மற்றும் அக்குள் பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுக்கள் வீக்கம் அடையும். இது நம்முடைய உடல் அதிகப்படியாக உழைத்து கிருமிகளை அழிக்கிறது என்பதற்கான அடையாளம் ஆகும். அதுவே தொடர்ந்து நிணநீர் முடிச்சுக்கள் இரண்டு வாரத்துக்கும் மேலாக வீக்கத்துடன் இருந்தால் அது நல்லதற்கு இல்லை. உடனடியாக மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

மலம் கழிக்கும் போது எப்போதாவது ரத்தம் வந்தால் பயப்பட வேண்டாம். ஆனால் தொடர்ந்து மலத்துடன் ரத்தமும் வெளியேறுகிறது என்றால் கவனம் தேவை. ரத்தம் வெளியேறுவது ஒரு அபாய எச்சரிக்கை மட்டுமே. அது புற்றுநோயாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. எனவே, பயப்படாமல் எதனால் ரத்தம் வெளியேறுகிறது என்பதை கண்டறிய வேண்டும். ரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோயா, வேறு பாதிப்பா என்பதை அறிந்துகொள்ளலாம்.

அதீத சோர்வு, சருமத்துக்கு அடியில் வீக்கம், தடித்தல், உடல் எடையில் திடீர் அதிகரிப்பு அல்லது குறைவு என மாறுபாடு ஏற்படுவது, மஞ்சள் காமாலை ஏற்படுவது, உணவு உட்கொள்வது மற்றும் செரிமானத்தில் மாறுபாடு, விழுங்குவதில் சிரமம், குரல் தடை, உணவு விழுங்குவதில் சிரமம், மூட்டு, தசை வலி, திடீர் காய்ச்சல், வியர்த்தல் போன்றவையும் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

குரல்வளையில் ஏற்படும் புற்றுநோய் காரணமாக குரல் பாதிக்கப்படும். கல்லீரலில் கட்டி ஏற்படும்போது பிலிருபின் அதிகரித்து மஞ்சள் காமாலை ஏற்படலாம். உடலில் மருக்கள் ஏற்படுவது கூட சரும புற்றுநோயாக மாறலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, அலட்சியம் காட்டாமல் உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற்றால் எளிய முறையில் புற்றுநோய் பாதிப்பிலிருந்து தப்பலாம்!