‘தீக்குளிக்க முயன்றவரை தடுக்காமல் வீடியோ எடுத்த மக்கள்’ : பெண் காவலர்களின் துணிச்சலான செயல்!
சமூக வலைத்தளங்களில் எந்த தகவலாக இருந்தாலும் உடனுக்குடன் தெரிய வந்து விடுகிறது. அந்த அளவிற்கு மக்கள் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சில நேரங்களில் இது நல்ல விஷயம் என்றாலும், பல இடங்களில் உயிருக்கு போராபவரை காப்பாற்றாமல் வீடியோ, போட்டோ எடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதே போல தான் ரயில்வே காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு வெளியிட்டிருக்கும் வீடியோவிலும் நடந்திருக்கிறது.
அதில், போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நபர் ஒருவர் திடீரென மண்ணென்னெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார். அதனை பார்த்த பொதுமக்கள், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுப்பதை விட்டு விட்டு அவரவர் செல்போன்களில் வீடியோ எடுக்கின்றனர்.
உடனே அங்கிருந்து பெண் காவலர்கள் சிவகாமி மற்றும் சுகன்யா, அந்த நபரை பிடித்து தீ வைத்துக் கொள்ளாமல் தடுத்து உயிரைக் காப்பாற்றினர். அவ்வளவு ஆண்களுக்கு மத்தியில் இந்த 2 பெண்கள் செய்த துணிச்சலான காரியத்திற்கு சைலேந்திர பாபு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.