விஜய் வைத்த கோரிக்கை…தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் சொன்ன தகவல்

 

விஜய் வைத்த கோரிக்கை…தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் சொன்ன தகவல்

நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய் சொகுசு காரை இறக்குமதி செய்து இருந்தார். இந்த இறக்குமதிக்கான நுழைவு வரியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம்.

விஜய் வைத்த கோரிக்கை…தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் சொன்ன தகவல்

தீர்ப்பின்போது அவர், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என்று கடுமையாக விமர்சித்தார். மேலும் தள்ளுபடி நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டதற்காக நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார் நீதிபதி. இதை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார் நீதிபதி.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவில், அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தன்னைப்பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விமர்சனம் மற்றும் அபராத உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டு இருந்தனர். அதேநேரத்தில் நுழைவு வரி பாக்கியை வசூலிக்க வணிகவரித் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். இதன் பின்னர் நுழைவு வரியை நடிகர் விஜய் செலுத்தி விட்டார் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டது .

இதை அடுத்து விஜய் தரப்பு மீதான விமர்சனங்களை நீக்கக் கோரிய விவகாரத்தில் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.