பொறியாளர் வீட்டில் திருடிய 2.5 கிலோ தங்கம், ரூ.8 லட்சம் மீட்பு; உறவினருக்கு வலை

 

பொறியாளர் வீட்டில் திருடிய 2.5 கிலோ தங்கம், ரூ.8 லட்சம் மீட்பு; உறவினருக்கு வலை

வேலூர்

வேலூர் அருகே ஓய்வுபெற்ற பொறியாளர் வீட்டில் திருடப்பட்ட இரண்டரை கிலோ தங்கம் மற்றும் 8 லட்சம் ரொக்கப்பணத்தை மீட்ட போலீசார், திருட்டில் ஈடுபட்ட உறவினரை தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (63). ஓய்வுபெற்ற பொறியாளரான இவர், மனைவி உயிரிழந்த நிலையில், தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி மாலை சந்திரன், தனது மகனுடன் விருதம்பட்டில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த இரண்டரை கிலோ தங்க நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபாய் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரன் அளித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், வேலூர் மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.

பொறியாளர் வீட்டில் திருடிய 2.5 கிலோ தங்கம், ரூ.8 லட்சம் மீட்பு; உறவினருக்கு வலை

இந்நிலையில், திருடுபோன தங்க நகைகள், 8 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை திருடிய நபரே சந்திரனின் உறவினர் மூலம் அவரிடம் ஒப்படைத்தார். இது குறித்து பேசிய சந்திரன், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தனது உறவினர் என்றும், நம்பிக்கைக்குரிய அந்த நபர் ஏன் திருட்டில் ஈடுபட்டார் என தெரியவில்லை என்று கூறினார். மேலும், திருடிய பணம், நகை, ஆவணங்களை மற்றோரு உறவினரிடம் கொடுத்தனுப்பி உள்ளதாகவும், அவற்றை அளவீடு செய்வதற்காக போலீசார் எடுத்து சென்றுள்ளதாகவும் கூறினார்.

இதுதொடர்பாக காவல் துறையினர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்திரனின் உறவினரை தேடி வருகின்றனர்.