“தமிழகத்தில் தலைமைப் பண்புள்ள தலைவர்கள் இல்லை” : திருமாவளவன் பரபரப்பு பேச்சு
தமிழகத்தில் தலைமைப் பண்புள்ள தலைவர்கள் இல்லை என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கின்றன.அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில், திமுகவுடன் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன. முன்னதாக திமுக கூட்டணியில் பாமக இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். காரணம் பாமக உள்ள கூட்டணியில் தாங்கள் இடம்பெற மாட்டோம் என்று திருமா திட்டவட்டமாக முடிவெடுத்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், “தமிழகத்தில் தலைமைப் பண்புள்ள தலைவர்கள் இல்லை. கூட்டணியில் இணைவதே போராட்டம்தான் ; அவ்வளவு எளிதில் அங்கீகாரத்தை கொடுத்துவிட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் நடப்பதைப் போல் தமிழகத்திலும், தேர்தலுக்குப்பின் அதிமுகவினர் பாஜகவுக்கு செல்வர் என்று தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், “தேர்தலுக்காக பாஜக எந்த அராஜகத்தையும் செய்வார்கள். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைப்பது கேவலமான செயல். நிச்சயம் இபிஎஸ்- ஓபிஎஸ்ஸால் அதிமுகவைக் காப்பாற்ற இயலாது. திமுக, அதிமுக உள்ளதால் தான் பாஜக தமிழகத்தில் இல்லாமல் இருந்தது. தற்போது அதிமுக மூலமே தமிழகத்திற்குள் நுழைய பார்க்கிறது. மோடியா? லேடியா? என்ற ஜெயலலிதா கேட்டதைப் போல எடப்பாடியால் கேட்க முடியுமா? அவர் கை சுத்தமில்லை. அதனால் அவர் பயப்படுகிறார். பாஜகவினால் நிச்சயம் அதிமுக அழிந்து போகும்” என்றார்.