‘போ புயலே போய்விடு…’நிவர் புயல்’ குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை!
நிவர் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து புயல் குறித்த கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் கடந்த 21ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக உருமாறியுள்ளது. நிவர் புயலின் தாக்கத்தினால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் பல நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரையை கடக்கவுள்ளது . இதனால் காற்றின் வேகம் 100கிமீ முதல் 140கிமீ வரை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
போ புயலே
போய்விடு
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்? ” என்று பதிவிட்டுள்ளார்.