உயிரோடு விளையாட வேண்டாம்… 10ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தக்கூடாது! – வைகோ வலியுறுத்தல்

 

உயிரோடு விளையாட வேண்டாம்… 10ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தக்கூடாது! – வைகோ வலியுறுத்தல்

10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியள்ளார்.
வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுத் தேர்வு தள்ளிப் போனதால், மாணவச் செல்வங்கள் துவண்டு இருந்த நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தக்கூடாது என ஏப்ரல் 7ம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.
அன்று இருந்ததைவிட, இன்று தமிழகத்தில் கொரோனா தொற்று பல நூறு மடங்கு உயர்ந்து இருக்கின்றது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலைமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
மூன்று மாதங்கள் இடைவெளி ஏற்பட்டு விட்ட நிலையில், மீண்டும் முறையான பயிற்சிகள் அளிக்காமல், ஆயத்தப்படுத்தாமல், மாணவச் செல்வங்களைத் தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. அது அவர்களின் மனநிலையைக் கடுமையாகப் பாதிக்கும். தங்கள் பிள்ளைகளின் உயிரோடு விளையாட பெற்றோர்களும் விரும்பவில்லை.
11ம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது. எனவே, தமிழக அரசு இந்தக் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்; அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என்று கூறியுள்ளார்.