எத்தனை மருத்துவர்கள், உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை வெளியிடவேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

 

எத்தனை மருத்துவர்கள், உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை வெளியிடவேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 43 மருத்துவர்கள் இறந்ததாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது போன்ற ஒரு தகவலை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்து வருகிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் பலியாவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் கொரோனா மரணங்களைத் தவணை முறையில் வெளியிடும் அடிமை அரசு, மருத்துவர்கள் நிலை குறித்தும் விளக்கியாக வேண்டும். எடுபிடிகளின் இந்த மெத்தனம் தமிழகத்துக்கே தலைகுனிவாகும்!” என்று கூறி ஐ.எம்.ஏ லிஸ்டை வெளியிட்டிருந்தார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “கொரோனாவால் தமிழகத்தில் அதிக மருத்துவர் பலியாவதாக வந்த செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார். அச்செய்தி பொய்யாக இருக்கவே நானும் விரும்புகிறேன். எனினும் கொரோனா பணியில் உயிர்த்தியாகம் செய்த அரசு-தனியார் மருத்துவர்-செவிலியர் உள்ளிட்ட முன்கள வீரர் விவரங்களை வெளியிட வேண்டும். அப்படி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான நிவாரணதொகை உரியமுறையில் வழங்கப்பட்டுள்ளனவா? என்பதையும் தெரிவிக்கவேண்டும். சுகாதாரத்துறையினர் நம்பிக்கையுடன் பணியாற்ற இந்த வெளிப்படைத்தன்மை அவசியம். கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களின் நலனில் கழகமும் இளைஞரணியும் என்றும் அக்கறையுடன் செயல்படும்” என தெரிவித்துள்ளார்.