“மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்” – உதயநிதி ஸ்டாலின் பேட்டி
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக திமுக, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னரே பரப்புரையை தொடக்கி விட்டது. கடந்த 2 முறையாக ஆட்சியை நழுவ விட்டது போல, இந்த முறையும் நடக்கக்கூடாது என்பதால் தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பே பரப்புரையை தொடங்கிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை நடத்திய நாகை, குத்தாலம், திருக்குவளை ஆகிய 3 இடங்களிலுமே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கொரோனாவை காரணம் காட்டி அரசு உதயநிதியின் பரப்புரைக்கு தடை விதித்த நிலையில், திமுகவை பரப்புரை நடத்த விடாமல் தடுப்பதற்காக தான் அரசு தன்னை கைது செய்வதாக உதயநிதி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் திருவாரூர் அருகே வடுகூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்தார். மேலும், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்கவேண்டும் என்றும் அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி அறிவித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.