தேர்தலிலும் அடித்து ஆடப்போகும் உதயநிதி… ஜெ. அன்பழகனின் தொகுதியில் போட்டி!
திமுகவில் பெரிய தலைக்கட்டுகள் கூட பிரச்சாரம் ஆரம்பம் செய்வதற்கு முன்பே களத்தில் குதித்தவர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஸ்டாலினுக்கும் முதல்வருக்கும் இடையே நிகழும் வார்த்தைப் போரை விட உதயநிதி ஸ்டாலினுடனான வார்த்தைப் போரே மக்களிடம் நன்கு பரிட்சமாகியது. அந்தளவிற்கு கலகலப்பாகப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
கட்சிப் பொறுப்பில் இல்லாமல் மக்களவையில் திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அதன்பின் 2019ஆம் ஆண்டு திமுகவில் இளைஞரணிச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்தே தொடந்து ஆளுங்கட்சிக்கு எதிராகப் பேசிவந்தார். தற்போது தேர்தல் களத்திலும் இறங்கியிருக்கிறார். ஆம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வழங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட அவருக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.
திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த இரு தேர்தல்களில் மறைந்த ஜெ. அன்பழகன் போட்டியிட்டுவந்தார். திருவல்லிக்கேணி பகுதிகளுடன் இணைப்பதற்கு முந்தைய சேப்பாக்க தொகுதியில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு அட்டகாசமான வெற்றிபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இத்தொகுதியை உதயநிதி தேர்ந்தெடுத்திருப்பார் என்பது அனுமானமாகக் கூறுகின்றனர்.