உதயநிதி ஸ்டாலினின் காரை மறித்த த.மா.கவினர்: பரபரப்பு சம்பவம்!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் ‘அதிமுகவை ஓரங்கட்டுவோம்’ என்ற வாக்கியத்தை திமுகவினர் மனதில் ஆழமாக பதித்து வருகிறார் உதயநிதி. அதோடு, மறைந்த திமுகவினரின் வீடுகளுக்கு சென்றும் வழியில் இருக்கும் முதியோரிடம் ஆசி பெற்றும் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
அந்த வகையில், இன்று அரியலூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். காடராதித்தம் கிராமத்தில் மேடை போட்டு பரப்புரை நடத்தி முடித்த பின்னர், உதயநிதி திருமானூர் புறப்பட்டார். இந்த நிலையில், திருமானூரில் ஜி.கே மூப்பனார் அரங்கத்தின் பெயரை அழித்து திமுகவினர் பரப்புரை நடத்தியதாக குற்றஞ்சாட்டிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், கட்சிக் கொடிகளுடன் சென்று உதயநிதியின் வாகனத்தை வழிமறித்தனர்.
ஜி.கே.மூப்பனாரின் புகழுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் திமுகவினர் செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர்கள், உதயநிதி உட்பட திமுகவினர் அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.