இருசக்கர வாகனம்- லாரி நேருக்கு நேர் மோதல்; இளைஞர் பலி!
தேனி
தேனி அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் போடி அடுத்த மேல சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜித்குமார் (21). இவர் குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த நண்பர் உதயநிதி (21) என்பவருடன் நேற்று உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
தேவதானப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது அஜித் வாகனத்தின் மீது, எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த உதயநிதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தேனி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநர் ராஜபாண்டியை கைதுசெய்தனர்.