தென்காசி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் – இருவர் பலி!

 

தென்காசி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் – இருவர் பலி!

தென்காசி

தென்காசி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்துள்ள கலிங்கப்பட்டி பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் கார்த்திகேயன்(24). இவர் அதே பகுதியில் செங்கல் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் கார்த்தியேன், தனது உறவினரான திருவேங்கடம் அடைக்கலாபுரத்தை சேர்ந்த காளிராஜ் (21) என்பவருடன், பெருங்கோட்டூரில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர்.

தென்காசி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் – இருவர் பலி!

சத்திரகொண்டான் விலக்கு அருகே வளைவில் திரும்பியபோது, கார்த்திகேயன் வாகனத்தின் மீது எதிரே வந்த வேன் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட கார்த்திகேயன் மற்றும் காளிராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கார்த்திகேயன் உயிரிழந்தார்.

தொடர்ந்து, காளிராஜுக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். திருவேங்கடம் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுனர் புளியங்குடியை சேர்ந்த செல்வகுமார்(53) என்பவரை கைது செய்தனர்.