பெண் யானையின் கோரை பற்களை விற்க முயன்ற இருவர் கைது!
கோவை
பொள்ளாச்சி அருகே பெண் யானையின் கோரை பற்களை விற்பனை செய்ய முயன்ற இருவரை வனத்துறையினர் கைதுசெய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள வேட்டைக்காரன்புதூர் பகுதியில் சிலர் யானையின் கோரை பற்களை விற்பனை செய்ய முயல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள், அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வேட்டைக்காரன் புதூரில் உள்ள பிரபல துணிக்கடையில் பெண் யானையின் கோரைப் பற்களை விற்க முயன்ற இருவரை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சேத்துமடை தம்மம்பதியை சேர்ந்த மணியன் (42) மற்றும் ஒடையகுளம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பது தெரியவந்தது.
மேலும், போத்தமடை போயங்காடு பகுதியில் அவர்கள் நடந்து சென்றபோது, இறந்துபோன யானையின் எலும்புக்கூடு இருப்பதை கண்டு, அதிலிருந்த இரு கோரை பற்களை எடுத்து விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களிடம் இருந்த 2 யானை கோரைப்பற்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைதுசெய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.