பூந்தமல்லி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது
சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதிகளில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஆய்வாளர் விஜயராகவன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நசரத்பேட்டை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள புதர் மண்டிக்கிடக்கும் பகுதியில், சந்தேகத்துக்கிடமாக 2 பேர் நின்றுள்ளனர். அவர்களை விசாரிக்கும்போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அவர்கள் இருந்த பையை, சோதனை செய்ததில், அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, வரதராஜபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(என்ற) டேனியல்(21), மனீஷ்(21), என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, இந்த பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது வந்தது. அவர்களை கைது செய்துள்ள போலீசார், கஞ்சா நெட்வொர்க்கை கைது செய்ய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.