லாரி-கார் நேருக்கு நேர் மோதல்- 3 பேர் பலி,4 பேர் படுகாயம்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு, திருச்சியிலிருந்து முசிறி நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார், முசிறி அருகே உமையாள்புரம் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த சேலத்தை சேர்ந்த பிரபாகரன் ( 30 ), பிரபு (42 ) ,ராஜலிங்கம், சதீஷ்குமார், உள்ளிட்ட 7 பேரில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயமடைந்த 4 பேரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவர்கள் சடலங்களை உடற்கூறு பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நள்ளிரவில் நடந்ததுடன், படுகாயம் அடைந்தவர்கள் சுயநினைவின்றி இருந்ததால் இறந்தது யார், காயமடைந்தவர்கள் யார் என்ற விபரத்தை உடனடியாக தெரிந்து கொள்ள இயலவில்லை . இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.