மனைவி பிரிந்து சென்றதால், சுங்கச்சாவடி ஊழியர் ரயிலில் விழுந்து தற்கொலை!
திண்டுக்கல்
திண்டுக்கல் அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால், சுங்கச்சாவடி ஊழியர் ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த தருமபுரி கிராமத்தை சேர்ந்தவர் கமல கண்ணன் (36). இவர் கொடைரோடு சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் வேலை செய்தபோது, மதினா பானு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதினா பானு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த கமல கண்ணன், மனைவியை சேர்ந்து வாழ வரும்படி அழைத்துள்ளார். ஆனால் அதற்கு மதினாபானு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்வில் விரக்தியடைந்த கமல கண்ணன், சம்பவத்தன்று கொடைரோடு அருகே தற்கொலை செய்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். அப்போது, அந்த வழியாக நாகர்கோவில் சென்ற ரயில் ஏறியதில் அவர் உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கொடைரோடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.