“சீக்கிரம் ரெட் அலர்ட் அறிவிக்க வேண்டும்” – அவசர அவசரமாக ஸ்டாலினை அலர்ட் செய்த எம்பி!
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலைமை கொஞ்சம் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க இடமில்லாமல் மருத்துவர்கள் திணறுகின்றனர்.
இங்கு தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமில்லாமல் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சை பெறுவதால் படுக்கை வசதி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தருமபுரி எம்பி செந்தில்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் அலர்ட் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “தருமபுரி மாவட்டம் கொரோனா ரெட் அலர்ட் மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும். பொது ஊரடங்கு கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
இறப்பு விகிதம் கட்டுப்பாட்டை மீறி செல்கிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுடன் தொடா்ந்து ஆலோசனை செய்து வருகிறோம். ஆக்ஸிஜன் வசதி 450 படுக்கைகள் உள்ளன. ஆயிரம் படுக்கைகள் நிரம்பிவிட்டன. தருமபுரி மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பத்தாயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.