சொன்னதை செய்து காட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

 

சொன்னதை செய்து காட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

பட்டாசு, தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு தனியே அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசியபோது, தற்போது, உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தின்கீழ், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் தங்களது நலஉதவிகளை பெற்று வருகின்றனர். இதில், சுமார் 4 லட்சம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வகையில், அவர்களுக்கென தனியே ஒரு நலவாரியம் அமைக்க வேண்டுமென்று பால்வளத்துறை அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழில் அமைப்பை சேர்ந்தவர்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 4 லட்சம் தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு, அதிமுக அரசு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கென தனியே ஒரு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை அமைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.””

மேற்படி முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம், தொழிலாளர் நலத்துறை அமைச்சரை தலைவராகவும், அரசு பிரதிநிதிகளாக செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆகியோரும் அலுவல்சாரா உறுப்பினர்களாக, வேலையளிப்போர் பிரதிநிதிகளாக பட்டாசு தொழிற்சாலை சார்பான பிரதிநிதி, தீப்பெட்டி தொழிற்சாலை சார்பான பிரதிநிதி மற்றும் தொழிற் கூட்டமைப்பின் பிரதிநிதி ஆகியோரும், தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக பட்டாசு தொழிற்சாலை தொழிற்சங்கத்தின் பிரதிநிதி, தீப்பெட்டி தொழிற்சாலை தொழிற்சங்கத்தின் பிரதிநிதி மற்றும் பிற தொழிற்சங்க பிரதிநிதி ஆகியோர் அடங்கிய வாரியம் அமைப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆணையிட்டுள்ளார். மேற்கூறிய ஆணைக்கிணங்க அரசாணை எண்.214, தொ (ம) வே.வா துறை, நாள் 30.12.2020-ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சொன்னதை செய்து காட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள 62661 பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு இந்நலவாரியம் தொடங்கப்படும். இன்றைய தேதியில் 1250 பட்டாசு தொழிற்சாலைகளும், 870 தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இதில், ஏறத்தாழ 1,20,000 தொழிலாளர்கள் இத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருவதாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். இத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அமைக்கப்படவிருக்கும் புதிய நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து பயன் பெறலாம். இந்நலவாரியத்தின் தலைமையிடம் சென்னையில் செயல்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.