திருப்பத்தூர்: ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கள்ளக்காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை
திருப்பத்தூரை அடுத்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கள்ளக்காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பலப்பநத்தம் எரிவட்டம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(35). இவர் அதேபகுதியை சேர்ந்த சென்றாயன் என்வரது மனைவி மீனாட்சி என்கின்ற ரீட்டா(33) உடன் சில ஆண்டுகள் நட்பாகப் பழகி வந்துள்ளார்.
இது காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த இருவரின் குடும்பத்தாரும் சக்திவேல் மற்றும் ரீட்டாவையும் கண்டித்துள்ளனர். மேலும், இருவரையும் சந்திக்க விடாமல் அவர்கள் தடுத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சக்திவேல் மற்றும் ரீட்டா ஆகியோர் நேற்று வாணியம்பாடியில் இருந்து ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு சென்று, அங்குள்ள மரத்தில் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற குரிசிலாப்பட்டு போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.