திருப்பத்தூர்: தூங்கில் தொங்கிய ராணுவ வீரர் மனைவி! கொளுந்தனிடம் விசாரணை!
திருப்பத்தூரில் ராணுவவீரர் மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதால், மகள் சாவில் சந்தேகம் என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் தாலுகா மட்றபள்ளி கிராமத்தில் வசிப்பவர் கோடீஸ்வரன் (வயது 40), ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் மான்கானூர் கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணனின் மகள் சுப்புலட்சுமி (30) என்பவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சுப்புலட்சுமி தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கில் பிணமாகத் தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தந்தை கிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
சுப்புலட்சுமியின் தந்தை கிருஷ்ணன், சம்பவம் குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில் மருமகன் கோடீஸ்வரனின் அண்ணன் சுரேஷ் (42) அடிக்கடி குடித்து விட்டு தம்பி கோடீஸ்வரனின் வீட்டுக்கு வந்து, சொத்தை விற்று பணம் தரும் படியும், தகாத வார்த்தைகளால் பேசுவதுமாக இருந்து வந்தார். எனவே சுரேஷ், எனது மகள் சுப்புலட்சுமியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம், சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சுப்புலட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் திருப்பத்தூர் சப்-கலெக்டர் அப்துல் முனிர் விசாரணை நடத்தி வருகிறார்.