மொபைல் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க 3 ஐடியாக்கள்!

 

மொபைல் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க 3 ஐடியாக்கள்!

ஒவ்வொரு தொழில்நுட்பம் நுழையும்போது அதைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும். அதற்கு காரணம், அதன் மீது உள்ள ஈர்ப்பே. அதில் உள்ள எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நேரத்தை மிக அதிகமாகச் செலவழிப்போம். முந்தைய தலைமுறைக்கு தொலைக்காட்சி என்றால், இந்தத் தலைமுறைக்கு மொபைல். அதுவும் குழந்தைகள் மொபைல் கேட்டு அடம் பிடித்தால் என்ன செய்வது என்றே புரியாது. சில குழந்தைகள் மொபைலில் வீடியோ பார்த்தால்தான் சாப்பிடும். மொபைல் பார்த்துக்கொண்டே தூங்கும் குழந்தைகளும் உண்டு. இப்போதைய பெற்றோரின் முதன்மையான கவலையே, மொபைலிலிருந்து எப்படிக் குழந்தைகளைப் பிரிப்பது. அதாவது மொபைலிலிருந்து எப்படிக் குழந்தைகளை மீட்பது? அந்தளவுக்கு குழந்தைகள் மொபைலுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறார்கள்.

மொபைலில் குழந்தைகளின் மூழ்கிவிடுவதால் அவர்க்ளின் நேரம் விரயமாவது மட்டுமல்ல, உடல், மனம் இரண்டுமே பாதிக்கப்படும் என நிபுணர்கள் சொல்கின்றனர். கவனிக்கும் ஆற்றலும் பார்வைத் தொடர்பான பிரச்னைகளும் வரக்கூடுமாம். சரி, மொபைல் மோகத்திலிருந்து உங்கள் குழந்தைகளை விலகச் செய்ய இந்த மூன்று விஷயங்களைச் செய்துபாருங்கள்.

மொபைல் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க 3 ஐடியாக்கள்!

1. குழந்தைகளுக்கு வழிகாட்டி பெற்றோர்தாம். அதனால், நீங்கள் குழந்தைகள் முன் மொபைல் பயன்படுத்துவதை முடிந்தளவு குறைத்துவிடுங்கள். அவசரம் கருதி பேச வேண்டியதைத் தவிர பேஸ்புக், வாட்ஸப் பார்ப்பது போன்ற பழக்கங்களை குழந்தைகள் பார்க்கும் நேரங்களில் செய்யாதீர்கள். அதாவது மொபைலில் மற்றவர்களோடு பேசலாம் என்கிற அளவில் குழந்தைகளின் மனதில் நினைக்க வைக்க வேண்டும். உங்கள் உறவினர்கள் வீடியோ காலில் அழைத்தால் பேசி முடித்தவுடனே மொபைலைத் தூரமாக வைத்துவிடுங்கள்.

மொபைல் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க 3 ஐடியாக்கள்!

2. கேம்ஸ் விளையாடுவதுதான் குழந்தைகள் அதிக நேரம் மொபைலைப் பயன்படுத்த காரணம். அதனால், மொபைலில் கேம்ஸ் மற்றும் தேவையில்லாத ஆப்ஸ் எதுவும் வைத்துக்கொள்ளதீர்கள். தங்கள் நண்பர்ளின் பெற்றோரின் மொபைலில் கேம்ஸ் இருக்கிறதே எனக் கேட்டாலும் கண்டிப்போடு மறுத்துவிடுங்கள். உங்கள் குழந்தைகள் செய்கைகளை, புதிய ஆடைகளை போட்டோ மற்றும் வீடியோ எடுக்க ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், சின்னச் சின்ன விஷயங்களையும் தவற விடக்கூடாது என மொபைலால் குழந்தைகளைத் துரத்தாதீர்கள். இதனால் இரண்டு விளைவுகள் நடக்கக்கூடும். ஒன்று, அவர்களும் அதேபோல மொபைலைப் பயன்படுத்த ஆசையை ஏற்படுத்திவிடும். அடுத்து, அந்த வீடியோக்களை சோஷியல் மீடியாவில் அப்லோட் செய்கிறேன் என அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடலாம். எனவே, குழந்தைகள் முன் முடிந்தளவு மொபைல் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

மொபைல் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க 3 ஐடியாக்கள்!

3. குழந்தைகளிடம் மொபைல் கொடுக்க வில்லை. சரி. பொழுதுபோக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதும் அவசியம். இல்லையெனில், எப்படியாவது அவர்கள் மொபலை நாட ஆரம்பித்துவிடுவார்கள். கொஞ்ச நேரம் டிவி பார்க்க விடுவது, பாடல்கள் இசைக்க விட்டு நடனமாடுவது, கேன்வாஸில் ஓவியம் வரைவது, செடிகளைப் பராமரிப்பது, கைவினைப் பொருள்கள் செய்வது, வீட்டை அழகுப் படுத்துவது, பறவைகள் பார்ப்பது… என 20 பொழுதுபோக்குகளின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். அவசியம் அந்த இருபதும் உங்கள் குழந்தைக்கும் பிடித்திருக்க வேண்டும். அந்த இருபது பொழுதுபோக்கு அம்சத்திலிருந்து தினமும் நான்கு செய்தாலே ஒருநாள் எளிதாகக் கழிந்துவிடும்.

‘மூன்று ஐடியாக்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, நடைமுறைக்கு சரியா வருமா?’ என்று நீங்கள் யோசித்தால், நிச்சயம் முடியும். கொஞ்சம் முயற்சி, கொஞ்சம் தேடல், நிறைய பொறுமை ஆகியவை இருந்தால் சாத்தியமே. உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான பழக்கத்திற்கு என்று நினைத்தால் மிக எளிதாகவே முடியும். முயற்சி செய்துபாருங்கள். வாழ்த்துகள்.