பிரான் மலை கல் குவாரியை எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
பாரி மன்னன் வாழ்ந்ததாக கூறப்படும் பிரான் மலையில் அமைக்கப்பட்ட கல் குவாரியை எதிர்த்து போராடியவர்களை தமிழக அரசு கைது செய்தற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்குவாரி உத்தரவை திரும்பப் பெற வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்ற அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழரின் பெருமைக்குரிய அடையாளமும் கடையேழு வள்ளல்களில் முதன்மையானவருமான பாரி மன்னன் வாழ்ந்ததாக கூறி, தமிழ் இலக்கியச் சான்றுகளோடு ஆய்வறிஞர்களால் அடையாளப்படுத்தபட்ட பிரான் மலை எனப்படும் பறம்பு மலையில் ஆண்டுதோறும் பாரி விழாவினை தமிழ்ச் சான்றோர்கள் வெகு சிறப்பாக நடத்தி வந்தனர்.
அத்தகைய வரலாற்றுப் பெருமைக்குரிய பறம்பு மலையை இன்று மலை மணலுக்காகவும், கல் குவாரிக்காகவும் சிலர் சிதைத்து வருகின்றனர் என்று வெளியாகும் செய்திகள் பேரதிர்ச்சியையும் மனவலியையும் தருகிறது.
பாரி வள்ளல் வாழ்ந்த பறம்பு மலை எனப் போற்றப்படும் பிரான் மலை, கல் குவாரிக்காக வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது. தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் | நாம் தமிழர் கட்சி https://t.co/RsCGCgs51K
— சீமான் (@SeemanOfficial) July 21, 2020
இதனைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி கடந்த 13 அன்று சிவகங்கை அரண்மனை வாயிலில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தது. ஆனால் போராடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய அரசு, பரம்பு மலை சிதைக்கப்படுவதைக் கண்டுக்கொள்ளவேயில்லை. எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணற் கொள்ளை தடுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து ‘பறம்பு மலை மீட்புக் குழு’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் பறம்பு மலை சிதைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முற்பட்டனர். இதற்காக மணற் கொள்ளை நடைபெறும் இடத்தை இன்று நேரில் ஆய்வு செய்ய சென்ற அக்குழுவினரை செல்லும் வழியிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு இத்தகைய வரலாற்றுப் பெரும்பிழை இனியும் தொடராமல் தடுத்து நிறுத்த வேண்டும்.
அண்மைக் காலமாக தமிழகத்தில், இயற்கை வளங்களான மலைகள், ஆறுகள், ஏரிகள், காடுகள், விளைநிலங்கள் தொடர்ந்து கொள்ளை போக கூடிய சூழல் உருவாகுவதும் அதை எதிர்த்து நாம் போராடுவதுமே தொடர்கதையாகி விட்டது. இயற்கை வளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டு அடுத்த தலைமுறையின் நல்வாழ்விற்கு நாம் எதனை விட்டுச்செல்ல போகிறோம்? பிரான் மலை
அழிக்கப்படுவதை நாம் தடுத்து நிறுத்தாவிட்டால், அடையாளம் என்ற வகையில் நம்மின முன்னார்களுக்கு மட்டுமின்றி, இந்த மண்ணின் வளம் என்ற வகையில் நமக்கு பின்வரும் தலைமுறையினருக்கும் நாம் செய்யும் பச்சைத்துரோகமாகும்.
எனவே இதையெல்லாம் உணர்ந்து பாரி வள்ளலின் புகழ்கூறும் பிரான் மலை எனப்படும் பறம்பு மலை அழிக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் எனவும், கைது செய்யப்பட்டுள்ள பறம்பு மலை மீட்புக் குழுவினர் அனைவரையும் வழக்கு ஏதுமின்றி விடுவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். மேலும் பறம்பு மலையில் பெரும்பாட்டன் பாரி வள்ளலுக்கு மணிமண்டபம் கட்டவேண்டுமெனவும், ஆண்டுதோறும் அங்கு நடைபெற்றுவந்த பாரி விழாவினை இனி அரசு விழாவாக கொண்டாட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.