ஹெச்.ராஜாவை உடனே சிறையிலடைக்கணும்- திருமாவளவன்

 

ஹெச்.ராஜாவை உடனே சிறையிலடைக்கணும்- திருமாவளவன்

எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, அமைச்சர் பழனிவேல் தியாகராசன் ஆகியோருக்கு எதிராக அவதூறு பேசிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்க வேண்டுமென விசிக தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

ஹெச்.ராஜாவை உடனே சிறையிலடைக்கணும்- திருமாவளவன்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா மீது அவதூறாகவும், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனையும் அவமதித்தும் பேசியுள்ள ஹெச். ராஜாவைக் கைதுசெய்ய வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். பாஜக தேசியப் பொறுப்பாளர் ஹெச். ராஜா அண்மையில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு எதிராக அபாண்டமான முறையில் அவதூறு செய்து பேட்டி அளித்துள்ளார்.

“ஜெயிலர் ஜெயப்பிரகாஷைக் கொன்ற’ அல்-உம்மா’ வோட ஆளு இன்னைக்கு பாபநாசத்தோட எம்எல்ஏ” என்று பொய்யானத் தகவல்களைக் கூறியுள்ளார். அத்துடன், அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக, ‘கோவிலைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு உரிமை இல்லை; அவர் நிதி மந்திரி. அவரை அவன் இவன் என்று பேசுவதற்கு எனக்கு முடியாதா? என்றும் கேட்டுள்ள ஹெச்.ராஜா, ‘வெளிநாட்டில்படித்துவிட்டு, வெளிநாட்டுல திருமணம் பண்ணிட்டு குடும்பம் நடத்தறவர் தமிழனா இருக்க முடியாது. அவர் ஒரு தமிழனே கிடையாது’ என்றும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். அவரது பேச்சு தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் பரவி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஹெச்.ராஜாவை உடனே சிறையிலடைக்கணும்- திருமாவளவன்

இப்படி அவதூறு செய்வதும், வெறுப்புப் பிரச்சாரம் செய்வதும் ஹெச்.ராஜாவுக்கு வாடிக்கையான ஒன்றாகவுள்ளது. ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளை அவர் இழிவுபடுத்திப் பேசியதையும், அவர் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் காரணமாக மன்னிப்பு கோரியதையும் நாடே அறியும். தொடர்ந்து ஹெச் .ராஜா இப்படி பேச அனுமதித்தால் சமூகத்தில் தேவையற்ற பதற்றம் ஏற்படும். தமிழக அரசும் மக்களும் கொரோனா பேராபத்தை எதிர்கொள்வதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிற இந்தச் சூழலில், ஹெச்.ராஜாவின் இத்தகைய பேச்சுகள் தேவையற்ற குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதுடன், அரசின் செயல்பாடுகளையும், மக்களின் கவனத்தையும் திசை திருப்புவதாக இருக்கிறது.

எனவே, ஜவாஹிருல்லா, அமைச்சர் பழனிவேல் தியாகராசன் ஆகியோருக்கு எதிராக அவதூறு பேசியுள்ள அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து அவரைச் சிறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.