இது திமுக அரசு இல்லை; சமூக நீதி அரசு- திருமாவளவன்
தமிழக அரசின் 130 நாள் ஆட்சியானது அனைத்து தரப்பு மக்களும், அனைத்து அரசியல் நோக்கர்களும் பாராட்டுகின்ற அரசாக உள்ளது என்றும், இது திமுக அரசு அல்ல சமூக நீதி அரசு என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தமிழக ஆளுநருராக பொறுப்பேற்றுள்ள ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. நாகலாந்து மாநிலத்தில் அவருக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து. எனவேதான் அவரது நியமனத்தை திரும்பப்பெற வேண்டும் என்பது விசிக நிலைப்பாடு. ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது, ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் நான் பங்கேற்கவில்லை.
தமிழகத்தில் திமுகவின் ஆட்சி சிறப்பாக உள்ளது. திமுக அரசு என்பதைவிட சமூக நீதி அரசு என்பதே பொருத்தமானது. முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனையின் போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது, இதை விடுதலைச் சிறுத்தைகள் கடுமையாக கண்டிக்கிறது.
நீட் தேர்வு மாணவர்களை மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. அனிதா முதல் சௌந்தர்யா வரை தற்கொலை செய்து கொள்வோரின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது, பல மாணவர்களை பலி கொடுத்துள்ளோம் செங்கல்பட்டு சேர்ந்த அனுசுயா நீட் தேர்வு எழுதி வந்த பின் மன உளைச்சலுக்கு ஆளாகி தீ குளித்ததில் 40% அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, எனவே சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தமிழக அரசு மருத்துவ உதவி வழங்க வேண்டும். சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்திற்கு குடியரசு தலைவர் சட்ட முன் முடிவிற்கு விரைவில் கையெழுத்து இட வேண்டும்
வரும் 20 ஆம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து, வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் ஜனநாயக சக்திகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 20ஆம் தேதி தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் நடந்திருப்பதாக அப்போதே பேசப்பட்டது. ஆனால் தற்போது அது வெளிச்சத்திற்கு வந்து உள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து அதிமுக தலைமையே பெருமளவில் விமர்சனம் செய்திட வில்லை, எதிர்ப்பும் காட்டவில்லை. ஆதாரம் இல்லாமல் இருந்தால் அவர்கள் போராட்டம் நடத்திருக்க கூடும். எனவே இதில் இருந்தே திமுக அரசு எடுக்கும் நடவடிக்கை நியாயமானது என அனைவருக்கும் புரியும்” என தெரிவித்தார்.