காலையில் எழுந்ததும் செய்ய வேண்டியவை… செய்யக்கூடாதவை! #HealthyTips
ஒரு நாளின் தொடக்கம் சரியாக அமைந்துவிட்டால், அது தரும் நம்பிக்கை அந்த நாளையே மலர்ச்சியானதாக மாற்றிவிடும். விடியற்காலையில் நாம் எழுந்திருப்பது நம் உடலுக்கும் மனத்துக்கும் மிகவும் நல்லது.
அதிகாலையில் எழுந்திருக்க, இரவு 9 – 10 மணிக்குள் தூங்கச் சென்று விட வேண்டும். அதற்கு இரண்டு மணிநேரத்துக்கு முன் இரவு உணவை முடித்து விட வேண்டும்.
தூங்கச் செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன், வழக்கமாக அருந்தும் தண்ணீரை விட கூடுதலாக நீர் குடித்தால், விடியற்காலையில் அதுவே எழுப்பி விடும்.
சரியான நேரத்திற்கு அலாரம் வைப்பது நல்ல விஷயம்தான். ஆனால், இனிமையான அலார ஓலியைத் தேர்ந்தெடுங்கள். மாறாக, அதிக சத்தத்தோடு இரச்சலாக ஒலிக்கும் அலாரத்தால் பதற்றத்தோடு எழுந்திருக்க வேண்டியிருக்கும். அந்தப் பதற்றம் நாள் முழுவதுமே தொற்றிக்கொள்ளக்கூடும்.
சரி, எல்லாம் சரியாக வைத்து விடியற்காலையில் எழுந்துவிட்டோம். இனி, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றித் தெரிந்துகொள்வோம்.
செய்ய வேண்டியவை:
நிதானமாக எழுந்து, காலை கடன் முடித்து, சில நிமிடங்கள் தியானம் மேற்கொள்ளலாம்.
குளிர்ந்த நீர் இரு டம்ளர் குடிப்பதைப் பழக்கமாகிக் கொள்ளலாம். அது வயிற்றில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும்.
பயிற்சியாளரின் வழிகாட்டலோடு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இல்லையெனில், வாக்கிங் செல்வது சிறந்தது.
காலை நேரக் காற்று சுத்தமாக இருக்கும். அதனால், மூச்சுப் பயிற்சி செய்யும் பழக்கம் உள்ளவர்கள் தவறாது செய்யுங்கள்.
இரவு உணவுக்குப் பிறகு 12 மணிக்கு மேல் நேரமாகியிருக்கும். வயிறு காலியாக இருக்கும். எனவே, காலை உணவை சாப்பிட தாமதம் செய்யாதீர்கள்.
செய்யக்கூடாதவை:
விடியற்காலையில் எழுவதைத் தள்ளிப்போட்டு, எட்டு, ஒன்பது மணி ஆக்கக்கூடாது என்பதே முதல் விஷயம்.
காலையில் பல் துலக்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துகொள்ளக் கூடாது. அதிக நேரம் துலக்குவதால் ஈறுகள் கெடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல செம்மண், சாம்பல் போட்டு பல் துலக்கக்கூடாது.
சிலருக்கு காலையில் எழுந்தவுடனே புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கும். இது வழக்கமாக நீங்கள் பிடிக்கும் சிகரெட் தரும் கெடுதலை விட அதிக கேட்டைத் தரும். குறிப்பாக, நுரையீரல், கழுத்து பகுதிகள் அதிக பாதிப்பைத் தரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
எனவே, சிகரெட் குடித்தால்தான் காலைக்கடன் செல்ல முடியும்… இது பத்து வருடப் பழக்கம் என்றெல்லாம் காரணங்கள் சொல்லாமல் உடனே இந்தப் பழக்கத்திற்கு தடை போடுவதே நல்லது. முடிந்தால் புகை பழக்கத்திற்கே குட் பை சொல்லிவிட்டால் ரொம்ப நல்லது.
காலையில் எழுந்ததும் தலை சுற்றல் வரக்கூடியவர்கள் பால் டீ அல்லது காபி குடிப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதில் லெமன் டீ, க்ரீன் டீ போன்றவற்றை மருத்துவர் பரிந்துரையோடு குடிக்கலாம்.
உடற்பயிற்சியாளர் வழிகாட்டல் இல்லாமல் பயிற்சி மேற்கொள்வது, மருத்துவர் பரிந்துரைக்காது தாமே மருத்துவமாக அரைத்துக்குடிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
புகைப் பழக்கத்தைப் போலவே சிலருக்கு, காலை எழுந்ததும் மது அருந்தும் பழக்கம் இருக்கும். அது நேற்றைய இரவின் தலைவலி போக என்று காரணம் சொல்வார்கள். இந்தப் பழக்கத்தை உடனே நிறுத்துவதே நல்லது. இல்லையெனில், குடிநோயாளியாக மாறுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.