இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்ட கணவனை கொன்ற மனைவி : பரிதவிக்கும் குழந்தைகள்!
கோவில்பட்டி அருகே 2ஆவது திருமணம் செய்ய முயன்ற கணவனை மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வசித்து வந்த தம்பதி பிரபு- உமா மகேஸ்வரி. இவர்களுக்கு 7 வயதில் ஆதிசிவன் என்ற மகனும் 4 வயதில் காவியா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த பிரபுவுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. குடித்துவிட்டு வந்து உமாமகேஸ்வரி இடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால் உமா மகேஸ்வரிக்கு உடல்நிலை பாதித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த பிரபு உமாமகேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த உமாமகேஸ்வரி அரிவாளை எடுத்து பிரபுவின் கழுத்துப் பகுதியிலும், கையிலும் வெட்டியுள்ளார். ரத்தவெள்ளத்தில் கதறிக் கொண்டே வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்த பிரபு, வீட்டு வாசலில் விழுந்து உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோவில்பட்டி போலீசார், பிரபுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு உமா மகேஸ்வரியை கைதுசெய்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு இச்சம்பவம் தொடர்பாக உமா மகேஸ்வரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் உடல்நிலை பாதிப்படைந்ததால் பிரபு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர் ஏற்பாடு செய்ததால் தான் அவரை கொலை செய்ததாகவும் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
உமா மகேஸ்வரியிடம் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். கணவன் மீதான கோபத்தில் உமா மகேஸ்வரி பிரபுவை கொலை செய்துவிட்டு தானும் சிறைக்கு சென்றதால், அவரது குழந்தைகள் இருவரும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.