தேடி வந்த கணவனை காதலன் மூலம் கொன்று வீசிய மனைவி
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அடுத்த துரிஞ்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். கூலி வேலை செய்துவரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரேமா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது.
விஜயகுமார் பிரேமா தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்திற்குப் பின்னர் விஜயகுமார் பிரேமா- தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது . இதனால் கோபித்துக் கொண்ட கணவனை விட்டு பிரிந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார் பிரேமா.
விஜயகுமார் அவ்வப்போது மனைவியிடம் சென்று சேர்ந்து வாழ வேண்டும் என்று கேட்டு வந்திருக்கிறார். அப்படித்தான் கடந்த 17 ஆம் தேதி அன்று மனைவியை பார்த்து பேசி அழைத்து விட்டு செல்லலாம் என்று சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் மேல்செங்கம் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். போலீஸ் விசாரணையில் கருங்குளம் ஏரிக்கரை பகுதியில் சடலமாக கிடந்த இருக்கிறார் விஜயகுமார்.
விஜயகுமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் குறித்து போலீசார் துருவித் துருவி விசாரித்ததில், கள்ளகாதலன் மூலம் கணவனை கொலை செய்து வீசியதை ஒப்புக்கொண்டிருக்கிறார் பிரேமா.
அம்பேத்கர் நகரில் வசிக்கும் எலக்ட்ரீசியன் ஆறுமுகம் என்பவருடன் பிரேமாவுக்கும் கள்ள உறவு இருந்து வந்திருக்கிறது . இந்த நிலையில் மீண்டும் வாழ வேண்டுமென்று தொடர்ந்து பேசி வற்புறுத்தி வந்ததால் ஆறு முகத்துடன் கள்ள உறவை தொடர முடியாமல் போய்விடுமோ என்று கள்ளக்காதலனிடம் வருத்தப்பட்டிருக்கிறார் பிரேமா. இதனால், விஜயகுமாரை கொன்றுவிடலாம் என்று பிரேமா சொல்ல, கள்ளக்காதலன் ஆறுமுகம் தான் கருங்குளம் ஏரிக்கரையில் வைத்து விஜயகுமாரை கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார்.
பிரேமாவின் இந்த வாக்குமூலத்தை கேட்டு விஜயகுமாரின் குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். இதையடுத்து ஆறுமுகத்தையும் பிரேமாவையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார். இதனால் இரண்டரை வயது பெண் குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதை நினைத்து அப்பகுதியினர் வேதனைப்பட்டு வருகின்றனர்.