’பிரதமரே பதவி விலகுங்கள்’ மாஸ்க், குடையுடன் தாய்லாந்தில் போராட்டம்
கொரோனா நோய்ப் பரவல் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. ஆனால், உரிமைகளுக்காக குரல் கொடுப்பதையும் அவற்றிற்காகப் போராடுவதையும் எதனால் தடுக்க முடியாது என்பதை நிருபித்து காட்டியிருக்கிறார்கள் தாய்லாந்து மக்கள்.
தாய்லாந்து நாட்டின் பிரதமராகப் பதவி வகிப்பவர் பிரயுத் சான் ஓ சா (Prayut chan-o-cha). இவர் அந்நாட்டின் ராணுவ தளபதியாக இருந்தவர். 2014 ஆம் ஆண்டில் ராணுவப் புரட்சி மூலமாக அந்நாட்டின் பிரதமரானார்.
தாய்லாந்தில் அரசுக்கு எதிரான குரல்களை ஒடுக்குவதாகவும் அரசை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து கூறிக்கொண்டே வரப்பட்டது.
இந்நிலையில் மாணவர் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் என்றாலும் அந்தச் செய்தி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ராணுவ புரட்சியால் ஆட்சியைப் பிடித்த பிரதமர் பதவி விலக வேண்டும். அமைச்சரவை கலைக்கப்பட்டு ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என 40,000 க்கும் அதிகமான மக்கள் ஒன்றுகூடி போராடியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பேங்காங் நகரில் நடந்த போராட்டத்தை யாரும் தலைமை ஏற்று நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்க் அணிந்து வந்த மக்கள் தங்கள் எதிர்ப்பை வலிமையாக தெரிவித்து கோஷமிட்டனர். மொபைல் போனில் உள்ள டார்ச் லைட்டை அடித்துக்காட்டினர்.
சமூக ஊடகங்கள் மூலம் திரப்பட்ட இந்தக் கூட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்மூலம் ஆளும் அரசு ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உள்ளாகி விட்டது. என்ன செய்யும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.