தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர் அறை மூடப்பட்டதால் பரபரப்பு… சில மணி நேரத்தில் வழிக்கு வந்த அரசு!
கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் பூட்டப்பட்ட பத்திரிகையாளர்கள் அறை ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்களுக்கு என்று தனியாக ஒரு அறை உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அந்த அறையை இன்று காலை அதிகாரிகள் இழுத்து பூட்டினர். தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா பரவி வருகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் அலுவலகம் மட்டும் பூட்டப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. அரசின் திடீர் நடவடிக்கை காரணமாக தலைமைச் செயலகம் சென்ற பத்திரிகையாளர்கள் அமர்ந்து செய்தி சேகரிக்கக் கூட வழியின்றி அவதியுற்றனர்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் அமைச்சர்கள், அதிகாரிகளை தொடர்புகொண்டு முறையிட்டனர். அதற்கு பல பத்திரிகை அலுவலகங்களில் கொரோனா தொற்று உள்ளதால், உங்கள் பாதுகாப்பு கருதிதான் பத்திரிகையாளர்கள் அறை பூட்டப்பட்டது என்று விளக்கம் அளித்தனர். ஆனால், இதை ஏற்க பத்திரிகையாளர்கள் மறுத்தனர். தலைமைச் செயலகத்தில் பல துறை அலுவலகங்களில் கொரோனா ஏற்பட்டுள்ளது. அதனால் தலைமைச் செயலகத்தை பூட்டிவிடலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. பத்திரிகையாளர்களின் கொந்தளிப்பு பற்றி மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பத்திரிகையாளர் அறைக்கு வந்த அலுவலர் ஒருவர் பூட்டைத் திறந்துவிட்டு சென்றார். எதற்காக பூட்டப்பட்டது, எதன் அடிப்படையில் திறக்கப்பட்டது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. செய்தி சேகரிக்கவிடாமல் தடுக்க அரசு முயற்சிப்பதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.