திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்… போலீசார் பரபரப்பு தகவல்…
திருச்சி
திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலைய அதிகாரிகளுக்கு நேற்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், விமான நிலையத்தில் குண்டு வைக்கப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், உடனடியாக சிஐஎஸ்எப் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதனை தொடந்து, விமான நிலையத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்றது. இதனால் விமானத்திற்காக காத்திருந்த பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் போலீசாரின் சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படாத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்தது.
இதனை அடுத்து, மிரட்டல் விடுத்த நபர் குறித்து, திருச்சி விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அந்த நபர் காரைக்குடியை சேர்ந்த பத்மாவதி என்பது தெரியவந்தது. திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை முன்னாள் ஊழியரான அவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.