விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

 

விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

சேலம்

ஆத்தூர் அருகே முன் விரோதம் காரணமாக விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளியை போலீசார் கைதுசெய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த மூலகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி (40). இவர் தனது குழந்தைகளுடன் விவசாய தோட்டத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில், பெரியசாமியின் வீட்டு கால்நடைகள் பக்கத்து தோட்டத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், பக்கத்து வீட்டில் வசித்து வரும் சந்திரசேகர் என்பவருடன், பெரியசாமிக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரியசாமி நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, பெரியசாமிக்கும், சந்திரசேகருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரையும் நண்பர்கள் சமாதானம் செய்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

இந்த நிலையில் நேற்று காலை பெரியசாமி, சந்திரசேகரின் வீட்டிற்கு சென்று தகராறு குறித்து கேட்டார். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பெரியசாமியை அரிவாளால் வெட்டிவிட்டு, சந்திரசேகர் தப்பியோடினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த மல்லியக்கரை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வந்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளி சந்திரசேகரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சந்திரசேகரை கைதுசெய்தனர்.