சண்டையால் பிரிந்து சென்றார்… குழந்தையை கொடுக்க மறுப்பு… காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்

 

சண்டையால் பிரிந்து சென்றார்… குழந்தையை கொடுக்க மறுப்பு… காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்

கருத்து வேறுபாடால் பிரிந்து சென்ற காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள அக்கரைதத்தப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் வீரமணிகண்டன் (28). எலக்ட்ரீசியனான இவர், அதே பகுதியை சேர்ந்த சாஸ்தாமூர்த்தி என்பவரின் மகள் பவித்ராவை (23) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகனும், கைக்குழந்தையும் உள்ளன. இதனிடையே, கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பவித்ரா தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இதனிடையே, தன்னுடைய குழந்தையை கொடுக்குமாறு கேட்டு பவித்ராவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் வீரமணி. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி நள்ளிரவில் வீரமணிகண்டன் தனது நண்பரான எரங்காட்டூர் பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவருடன் பவித்ரா வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் 2 பேரும் சேர்ந்து குழந்தையை கொடுக்குமாறு கேட்டு பவித்ராவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பவித்ராவின் தந்தை சாஸ்தாமூர்த்திக்கும், வீரமணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வாய்த்தகராறு முற்றியதில் வீரமணிகண்டன் ஆத்திரம் அடைந்து அருகில் நின்று கொண்டிருந்த பவித்ரா, தந்தை சாஸ்தாமூர்த்தி, அவருடைய மனைவி அமுதா (45) மற்றும் பாட்டி சித்தம்மாள் (70) ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு 9 மாத கைக்குழந்தையை வீரமணிகண்டன் மற்றும் ராம்குமார் ஆகியோர் தூக்கி சென்று தப்பினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானிசாகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கத்தியால் குத்தப்பட்டு காயம் அடைந்து கிடந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பவித்ராவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சாஸ்தாமூர்த்தி, அமுதா, சித்தம்மாள் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வீரமணிகண்டன் மற்றும் ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.