மேம்பாலத்தின் கீழே சடலமாக கிடந்த ஓட்டுநர்… போலீசார் விசாரணை…
கோவை
பொள்ளாச்சியில் பேருந்து ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் உள்ள மேம்பாலத்தின் அடியில், இன்று காலை ரத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த நபர், பொள்ளாச்சி பி.கே.எஸ். காலனியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பதும், அவர் தற்காலிக பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
பின்னர், சடலத்தை பிரதே பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளதால் யாரேனும் அடித்துக்கொன்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.