சாத்தான்குளம் காவல்நிலைய ஆவணங்களை சேகரிக்க வட்டாட்சியர் நியமனம்!
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் ஊரடங்கில் கடையைத் திறந்து வைத்திருந்ததால் போலீசாரால் தாக்கப்பட்டு, விசாரணைக்காகக் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதால் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சாதாரண மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்பட்ட இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டை தரக்குறைவாகப் பேசிய காவலர் மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமல் நேற்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 27 காவலர்களும் மாற்றம் செய்யப்பட்டு வேறு 27 போலீசார் அங்கு நியமிக்கப்பட்டனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்றக்கிளை, சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன் படி காவல் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செந்தூர்ராஜனை நியமித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் அவர் ஆவணங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.