‘டோக்கன் செல்வன்’ தினகரனுக்கு ‘அந்த’ ஐடியாவை கொடுத்ததே செந்தில் பாலாஜி தான்…புகழேந்தி பரபரப்பு தகவல்!
புகழேந்தி அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இது தினகரன் தரப்பிற்கு பெரும் அடியாக இருந்தது.
நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலில் அமமுக கட்சி படுதோல்வி சந்தித்ததையடுத்து அக்கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி அதிமுக மற்றும் திமுக கட்சிகளில் தங்களை இணைத்து கொள்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே செந்தில் பாலாஜி, கலையரசன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து விலகிய நிலையில் சேர்தலுக்கு பின் புகழேந்தி அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இது தினகரன் தரப்பிற்கு பெரும் அடியாக இருந்தது.
இந்நிலையில் மறைந்த அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை கொருக்குப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ செம்மலை மற்றும் தலைமை கழக பேச்சாளர் புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, ஆர்.கே நகரில் ஓட்டுக்கு 20 ரூபாய் டோக்கன் யோசனையை டிடிவி தினகரனுக்கு கூறியதே தற்போது திமுகவில் தஞ்சம் புகுந்துள்ள செந்தில் பாலாஜி தான் என்றார். மேலும் ஆர்.கே நகர் மக்களுக்காக டிடிவி தினகரன் இதுவரை என்ன செய்தார்? என்றும் கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பியுள்ளார்.