மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து 17 பேர் உயிரிழப்பு : வீட்டு ஓனர் மீது வழக்குப்பதிவு !
கனமழையின் காரணமாக அப்பகுதியில் இருக்கும் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து வரிசையாக நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் இருக்கும் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து வரிசையாக நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது. இதில், வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் 17 உயிர்கள் பறிபோனதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களைச் சமாதானம் செய்ய முற்பட்டும் அவர்கள் கலைந்து போகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், உயிரிழந்த 17 பேரும் குடியிருந்த அந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.