பேனரால் அநியாயமாக பறிபோன உயிர்: அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!
சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் ஒன்று அந்த பெண் மீது சரிந்து விழுந்தது. இதனால் அப்பெண் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
சென்னை: இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சுபஸ்ரீ என்ற 22 வயது இளம்பெண், பள்ளிக்கரணை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது
சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் ஒன்று அந்த பெண் மீது சரிந்து விழுந்தது. இதனால் அப்பெண் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது அந்த பெண்ணின் மீது தண்ணீர் லாரி ஒன்று மோதி சம்பவ இடத்திலேயே அநியாயமாக உயிரிழந்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவம் அங்கிருந்தவர்களை பதைபதைக்க செய்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார். பின்பு அவசர அவசரமாக அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினரும் லாரி ஓட்டுநர் மற்றும் பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் பேனர்கள் அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.