தி.மு.க ஆமை புகுந்த வீடு! வைகோவை வம்புக்கிழுத்த மு.க.அழகிரி மகன் !?
வைகோ மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிட்டாலும்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அழகிரியின் மகன் துரை தயாநிதி விமர்சித்துள்ளார்.
மதுரை: வைகோ ம.தி.மு.க.வை, தி.மு.க.வுடன் இணைத்துவிட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அழகிரியின் மகன் துரை தயாநிதி விமர்சித்துள்ளார்.
ஸ்டாலின் – அழகிரி மோதல்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே அழகிரி – முக ஸ்டாலின் இருவருக்கும் கட்சி ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. இதையடுத்து கலைஞர் கருணாநிதி மறைந்து விட்ட நிலையில், திமுகவின் தலைவராக முக ஸ்டாலின் பதவியேற்க வேண்டும் திமுகவினர் விருப்பம் தெரிவித்தனர்.
பலத்தை நிரூபிக்க முடியாமல் திணறிய அழகிரி
ஆனால் அதை விரும்பாத அழகிரி, தனது பலத்தை நிரூபிக்க, கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதி பேரணியில் 1,00,000 பேர் கலந்து கொள்வார் என்று கூறினார். ஆனால் அதில் 10,000 பேர் மட்டுமே பங்கேற்றது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து திமுகவில் மீண்டும் இணைய அழகிரி தூது அனுப்பிய நிலையில் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க ஸ்டாலின் துளியும் விரும்பவில்லையாம். இதனால் அழகிரியும் அவரது மகனுமான துரை தயாநிதி இருவரும் கடுப்பில் உள்ளனர்.
வைகோவால் ஆமை புகுந்த வீடான திமுக
Don’t be surprised if the most credible politician ? of TN, Gopalsamy merges his party MDMK with the DMK after the polls .. #Vaiko
? ⬅️ ?— Dhaya Alagiri (@dhayaalagiri) March 18, 2019
இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் வைகோவை விமர்சித்துள்ளார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. இது தொடர்பாக அவர் டிவிட்டரில், ‘தமிழகத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த இந்த அரசியல்வாதி கோபால்சாமி, தேர்தலுக்குப் பின் மதிமுகவை திமுகவுடன் இணைத்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை’ எனப் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ஒரு வீடு, அம்புக்குறி, ஓர் ஆமை போன்ற குறியீடுகளைப் பதிவிட்டுள்ளார். அதாவது, ஆமை புகுந்த வீடு என்று குறிப்பிடும் வகையில் மதிமுக திமுகவுக்குள் புகுந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார் .
‘ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி’
முன்னதாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணியைத் துரை தயாநிதி, ‘காலம் காலமாக திமுகவிலும், அதிமுகவிலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி’ என்று விமர்சித்திருந்தார்.
நாவடக்கம் வேணும் தம்பி!?
அரசியலில் களம் காண வேண்டும் என்று மண்டையை பிய்த்து கொள்ளும் துரை தயாநிதி இன்னும் அரசியல்வாதியாக மக்களிடத்தில் அறியப்படாதவர். ஆனால் அதற்கு முன்னரே அரசியலில் உள்ள மூத்த தலைவர்களை விமர்சித்து வருவது முகம் சுழிக்க வைத்துள்ளது. குறிப்பாக எதிர்காலத்தில் அவர் அரசியலில் ஈடுபட்டாலும் அவரது வளர்ச்சிக்கு இதுபோன்ற கருத்துகள் தடையாக இருக்கும். அதனால் அவர் நாக்கை அடக்கி கொள்ள வேண்டும் என்று மதிமுகவினர் கூறி வருகின்றனர். அரசியலுக்கு நாவடக்கம் வேணும் தம்பி..!?