சுய ஊரடங்குக்கு மத்தியில் அவசரகதியில் அரங்கேறிய திருமணங்கள்!

 

சுய ஊரடங்குக்கு மத்தியில் அவசரகதியில் அரங்கேறிய திருமணங்கள்!

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அண்மையில் அழைப்பு விடுத்தார். அதையடுத்து இன்று பிரதமர் மோடியின் அழைப்புக்கு பணிந்த இந்திய மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இதனால் நாட்டின் தேசிய சாலைகள், நகர சாலைகள், கிராம தெருக்கள் உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பேருந்து, ரெயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் அடுத்த 3 முதல் 4 வாரங்களுக்கு அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் மிகவும் ஆபத்தான சூழலில் இந்தியா இருக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதையடுத்து மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிக்கள், தேவாலயங்கள் மற்றும் இறை வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன

திருமணம்

இந்த நிலையில் தமிழகத்தில் வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க நடைபெறுவிருந்த திருமணங்கள் அமைதியான முறையில் அவசர அவசரமாக நடைபெற்றுள்ளது. நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடைபெறவேண்டும் என்பதற்காக இன்று காலை நெல்லை சந்திப்பிலுள்ள சாலைக்குமாரசுவாமி கோவிலில் ஏழு திருமணங்கள் அடுத்தடுத்து நடந்தது.  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று அதிகாலையிலே 4.30 மணிக்கு ஆரம்பித்து காலை 7.00 வரை நடைபெற்றது.   

திருமணம்

நாடு தழுவிய சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் கடலூரில் கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் கோவில் முன் சாலையோரங்களிலேயே சில திருமணங்களும் நடைபெற்றன.

இதற்கிடையில் திருச்சியில் நடைபெற இருந்த நிலையில் இன்று 12 திருமணங்கள் மற்றும் மதுரையில் நடைபெறவிருந்த திருமணங்கள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.