ஓ.பி.எஸ் -எடப்பாடி இடையே இப்படியொரு டீலா..? வெளியானது சமாதான ரகசியம்..!
அதிமுக கூட்டத்தில் அதிரி புதிரி கிளப்படும் என எதிர்கட்சிகள் முதல் கடைமட்டத்தொண்டர்கள் வரை நினைத்திருந்தால் உப்புச்சப்பில்லாமல் முடிந்து விட்டது. இதற்கு பின்னால் ஒரு படு பயங்கர ரகசியம் அடங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இன்று கூடிய அதிமுக கூட்டத்தில் அதிரி புதிரி கிளப்படும் என எதிர்கட்சிகள் முதல் கடைமட்டத்தொண்டர்கள் வரை நினைத்திருந்தால் உப்புச்சப்பில்லாமல் முடிந்து விட்டது. இதற்கு பின்னால் ஒரு படு பயங்கர ரகசியம் அடங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
ஒற்றைத் தலைமை கோஷம் எழுப்பட்டது முதல் அதிமுக நிர்வாகிகளுக்கு ஒற்றைத் தலைவலி ஆரம்பித்து விட்டது. எடப்பாடி பதவி காலி என ஓ.பிஎஸ் தரப்பும், ஓ.பிஎஸ் ஓரம் கட்டப்படுகிறார் என எடப்பாடி தரப்பும் தகவல்களை பரப்ப, தமிழ்நாடே பரபரப்பில் பற்றிம் கொண்டது. இன்று நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தை எதிர்கட்சிகள் யானை பசியோடு எதிர்பார்த்துக் காத்திருக்க சோளப் பொறியை கூட சிந்தாமல் இரு அணிகளும் இணக்கமாக சென்று விட்டன. ஒன்றுக்கும் உதவாத ஐந்து தீர்மானங்கள், ஊடகங்களிடம் பேச நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு என சாதாரணமாய் இந்தக் கூட்டத்தை கடத்தி விட்டது எடப்பாடி -ஓபிஎஸ் தரப்பு.
சூறாவளியாய் கிளம்பிய அதிமுக அரசியல் பிரச்சனை மேக மூட்டம் சாரல் மழையோடு முடிந்த ரகசியம் இப்போது வெளியாகி இருக்கிறது. அதாவது நேற்று இரவு ஓ.பிஎஸும், ஈபிஎஸும் தனியாக சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்போது கட்சி, ஆட்சியில் அதிகாரப்பகிர்வு, நிர்வாகிகளின் நிலை என பலதரப்பட்ட விஷயங்களை பேசியிருக்கிறார்கள். அப்போது குறுக்கிட்ட ஓ.பி.எஸ், சில அமைச்சர்கள் எனக்கெதிராக செயல்படுகிறார்கள். என்னை நம்பி வந்த ஆதரவாளர்களுக்கு பொறுப்புகள் எதுவும் கொடுக்கவில்லை. எனது மகன் எம்.பி ஆனதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதாக கருதுகிறேன்’ என பல விஷயங்களை கொட்டி இருக்கிறார்.
எடப்பாடியும் சில மன சங்கடங்களை பகிர்ந்திருக்கிறார். அதன் பிறகு பாமகவுக்கு ஒதுக்குவதாக இருந்த ராஜ்ய சபா எம்.பி சீட்டை அவர்களுக்கு கொடுக்க வேண்டாம். அவர்களுக்கு கொடுக்கவேண்டியதை எல்லாம் கொடுத்து விட்டோம். ஆகையால் உங்களது ஆதரவாளர்களுக்கு 2 சீட்டை கொடுத்து விடலாம். எனது தரப்புக்கு ஒரு சீட் கொடுக்கலாம். இனி வரும் பிரச்னைகளை நாமே பேசி சரி செய்து கொள்ளலாம். அதில் உறுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ள இருவரும் சமாதானமாகி இருக்கிறார்கள். அதன்பிறகே நிர்வாகிகள் கூட்டம் சப்பென்று முடிந்து விட்டது.
இவர்கள் பேசிக் கொண்டதை உறுதி படுத்தும் விதமாக ராஜ்யசபா எம்பியும், எடப்பாடி ஆதரவாளருமான வைத்திலிங்கம் , ‘இனி அதிமுஅவில் ஒற்றைத்தலைமை என்கிற பேச்சுக்கே இடமில்லை. எடப்பாடி- ஓ.பிஎஸ் இருவரும் இணைந்தே அதிமுகவை வழி நடத்துவார்கள்’ என உறுதி படக்கூறினார். ஆக மொத்தத்தில் வெடிக்க இருந்த அணுகுண்டு பதவி கொடுத்ததால் நமத்து போய் விட்டது.