ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சரக்கு வாகனத்தில் அழைத்துவரப்பட்ட கொரோனா நோயாளி உயிரிழப்பு!
மதுரையில் ஆம்புலன்சு கிடைக்காததால் மருத்துவமனைக்கு சரக்கு ஊர்தியில் ஏற்றி செல்லப்பட்ட கொரோனா பாதித்த நபர் உயிரிழந்தார்.
மதுரை அலங்காநல்லூர் முடுவார்பட்டி பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளியான பரணிமுத்து என்ற 31வயதுடைய இளைஞருக்கு இன்று கடுமையான காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் போன்ற கொரோனா அறிகுறியுடன் உடல்நலம் குன்றிய நிலையில் வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அதனை கண்ட உறவினர்கள் மதுரை அரசு கொரோனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துசெல்வதற்காக அரசு ஆம்புலன்சுக்கு தொடர்புகொண்ட நிலையில் தாமதமாகியுள்ளது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாக அங்கு நின்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தில் திறந்த வெளியில் வெயிலில் காய்ந்தபடி மயக்க நிலையில் அவசர அவசரமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து அனுமதித்தனர். அவர் மாலை 4:30 மணி அளவில் உயிரிழந்தார்.