பெரியார் விபச்சாரம் செய்தாரா? என யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தவர் கைது!

 
periyar

ழகரம் வாய்ஸ் என்ற யூ ட்யூப் சேனலில் பெரியார் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

Periyar - the father of Modern Tamil Nadu"

பெரியார் குறித்து இழிவுபடுத்தி பேசியதாக தந்தை பெரியார் திராவிட கழகம் நிர்வாகிகள் கொடுத்த புகாரில்  தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த குமரன் என்பவர் அளித்த புகாரில், “காலமெல்லாம் தமிழ் மக்களுக்காக உழைத்த தந்தை பெரியாரையும், நான் சார்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் அவர்களையும், திராவிட இயக்கத் தலைவர்களையும் இழிவு படுத்தி, தட்சிணாமூர்த்தி என்பவர் மிகவும் கீழ் தரமாக பேசியுள்ளார், தந்தை பெரியார் விபச்சாரம் செய்தார் என தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இந்த செயல் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை பின்பற்றுகிற என்னைப் போன்ற பெரியார் தொண்டர்களை மிகவும் கவலையடைய செய்துள்ளது. மேலும், முடிந்தால் தன் மீது வழக்கு தொடுத்து பார் என வீடியோவில் தட்சிணாமூர்த்தி சவால் விடுத்துள்ளார். இதுபோன்ற பேச்சுக்கள் அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழ்நாட்டில் மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் சூழலுக்கு வழிவகுக்கிறது.

தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களை மிக மிக கீழ்த்தரமாக ஆபாசமாக விமர்சிக்கின்ற சீதையின் மைந்தன் என்கிற அந்த நபர் ழகரம் வாய்ஸ்  யூடியூப் சேனலில் கடந்த 11/10/21 தேதியன்று பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால்  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், திட்டமிட்டு பொய் பிரச்சாரம் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கும் நோக்கில் இவர் பேசி உள்ளார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது, ஆகவே அய்யா அவர்கள் இவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து,  தட்சிணாமூர்த்தி மீது 153A,504B,505 (1)ஆகிய 3 பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,