சாலையோரம் கிடந்த சாக்கு மூட்டையில் பெண் சடலம்! மதுரையில் பரபரப்பு

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் ஈச்சனேரி பகுதியில் மூட்டையில் காயத்துடன் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு எதிர்ப்புறம் ஈச்சனேரி பகுதியில் மூட்டையில் துர்நாற்றம் வீசுவதாகவும், மனித உடல் இருப்பதாகவும் பெருங்குடி காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பெருங்குடி போலீசார் மோப்ப நாய் தடவியல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் சம்பவ இடத்தில் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்ததில் அந்த மூட்டைக்குள் 35 வயது மதிக்கத்தக்க பெண் உடல் இருந்ததும் உடலில் நெஞ்சு பகுதியில் இரு காயங்கள் இருந்தும் தெரிய வந்தது. பெண்ணின் உடல் இறந்து நான்கு நாட்களாக அழுகிய நிலையில் இருப்பதும், முகங்கள் சேதமடைந்ததால் அடையாளம் காண்பது சிரமம் இருப்பதாகவும், கைரேகையை கொண்டு அடையாளம் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.