சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு..!!
விழுப்புரம் வண்டிமேடு வள்ளலார் நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். இவருடைய மனைவி நித்யா (வயது 28). இவர் நேற்று காலை 10.30 மணியளவில் வண்டிமேடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென நித்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தார்.
உடனே அவர், திருடன் ... திருடன்.... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் நகையுடன் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

