ஆள் இல்லாமல் தானாக வந்த கார்... வாசலில் கோலம்போட்டபடியே பிரிந்த பெண்ணின் உயிர்!

 
கார் விபத்து

காஞ்சிபுரத்தில் 17 வயது சிறுவன் வீட்டிலிருந்து காரை வெளியே எடுத்தபோது கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை  சேர்ந்தவர் ராசா. இவர் முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்களை வீட்டில் தயார் செய்து மாருதி ஈகோ கார் மூலமாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை மகனும், அப்பாவும் வீட்டின் எதிர்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். 17 வயது சிறுவனான ராசாவின் மகன், காரை ஆன் செய்து சுத்தம் செய்து கொண்டிருந்தபோது கார் எதிர்பாராத விதமாக இயங்கியதாக கூறப்படுகிறது. அவரது வீட்டின் அருகில் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த வீட்டு வேலை செய்யும் சரஸ்வதி (53) என்ற பெண்மணி மீது வேகமாக கார் மோதி அருகில் இருந்த இரு சக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி முட்டி நின்றிருக்கிறது.

இதில் காருக்கு அடியில் சரஸ்வதி அம்மாள் சிக்கிக் கொண்டதால் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு பின்பு அந்த காரை நகற்றி சரஸ்வதியை மீட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 17 வயது சிறுவன போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.