சமயபுரம் கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிய பெண் நெஞ்சுவலியால் ரயிலிலேயே பலி

சமயபுரம் கோயிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய பெண் நெஞ்சுவலியால் ரயிலிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் உள்ள புகழ் பெற்ற சமயபுரம் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதேபோல் திண்டுக்கலை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது மனைவி கோமதி என்பவர் சமயபுரம் மாரிடம்மன் கோவிலுக்கு வந்துள்ளார். சாமி தரிசனம் செய்த பிறகு இன்று இரவு திருச்சியில் இருந்து இன்டர்சிட்டி ரயில் மூலம் திண்டுக்கலுக்கு புறப்பட்டுள்ளார். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் கோமதிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவருடன் வந்த உறவினர் தண்ணீர் கொடுத்து அமர வைத்துள்ளார். அந்த ரயில் மணப்பாறை நோக்கி வந்து கொண்டிருந்ததால இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் அளித்துள்ளனர். அவர் மூலம் மணப்பாறை ரயில்வே நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
ரயில் மணப்பாறைக்கு வந்தவுடன் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ அலுவலர் கோமதியை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. பின்னர் அவரது உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதனால் இன்டர்சிட்டி ரயில் 25 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றது இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.